Friday, June 11, 2010

இளவஞ்சி (சிறுகதை பாகம் 2)

புடவையை சரிப்படுத்திக் கொண்டு நான் வெளிவரும்போது மணி ஏழாகிவிட்டது. அணைவரும் தயாரன நிலையில் கிளம்ப காத்திருந்தனர். நானும் உச்சகட்டமாய் காலையில் வாங்கி வைத்த ரோஜாவையும், மல்லிகையையும் சூட்டிக்கொண்டு திரும்பும்போது, “வாங்கடி போகலாம், ரதம் கிளம்பிட போகுது”, என்றபடியே அறையை பூட்டிக்கொண்டு வந்தாள் வனஜா. நீல வண்ண புடவையில் அவள் தேவதை போல் இருந்தாள்.

எல்லோரும் நடந்து கோவில் வாயிலை அடையும் போது, உற்சவ சிலை ரததிற்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தது. நானும், தோழியரும் நடந்து வருகையிலே பதின்ம வயதினர் கூட்டம் எங்களை விசிலடித்து கேலி செய்தனர். அவர்களின் கேலி பேச்சு எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல. கோவிலுக்கு வரும் போது பிரச்சனை எதற்க்கு என்று நாங்களும் அவர்களை அதட்டுவதில்லை.

நுழைவாசலில் எங்களை பார்த்ததும், பூசாரி அய்யா “வாங்க மா, ஏன் இவ்வளவு தாமதம்?” என்ற தோரனையில் கண்களாலேயே கடிந்து, தலையாட்டி வரவேற்று திரும்பினார். வெள்ளி தோறும் கொயிலுக்கு வருவதால் அவருக்கு நாங்கள் பழகிவிட்டோம். கோவிலில் எப்போதும் நாங்கள் சந்திப்பவர்கள் எங்களை பார்த்ததும் புன்முருவல் பூத்தனர். வருகை தந்திருந்த பல ஆடவர்களும் எங்களை பார்த்த்தும் முப்பத்திரண்டு பல் தெரிய இழித்தனர்.

தூரத்தில் பதினேழு வயது மதிக்கத்தக்க இறு கன்னிகள் என்னைப் பார்த்ததும் அவர்களுக்குள் பேசி நகைத்துக் கொண்டனர். ஓர் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை சிகப்பு ஜரிகையிட்ட வெள்ளை பட்டு பாவடையணிந்து அங்கும் இங்கும் குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவளின் சுட்டிதனம் பார்ப்ப்வர் மனதை சுண்டி இழுத்தது. அவள் என்னை கவனிக்கும் போது கைகாட்டி அழைத்தேன். தனக்கே உரிய ராஜ பானியில் என்னை நோக்கி அவள் நடந்து வரும் அழகை காண்கையில், அய்யோ, எனக்கு இரண்டு கண்கள் போதவில்லையடா சாமி என்று கூவ தோன்றியது. அருகில் வந்த மழலையை உவகையோடு தூக்கினேன். கொஞ்சினேன். அவளும் என் தோடுகளை தொட்டும், காசுமாலையை தூக்கியும் விளையாடினாள்.

ஒரு முப்பது வயது நிரம்பிய பெண்மணி வேகமாய் என்னை நோக்கி நடந்து வந்தாள். என் கையில் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாய் இழுத்து தூக்கி “உன்னை ஒரு இடத்தில் இருக்க சொன்னால், இருக்கமாட்டியா?” என்று குழந்தையின் காலில் அடித்து கடந்து சென்றாள். சிரித்துக் கொண்டிருந்த மழலையின் கண்ணிலோ கண்ணீர். பாவம் அவள், உலகம் அறியாத பிஞ்சு பழம்.

கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்து, என் தோழிகளோடு ரதத்தை பின் தொடர்ந்தேன். பக்த பெருமக்கள் எங்களுக்கு வழிவிட்டு தள்ளியே நடந்தனர். கேளியும், கிண்டலும், சிரிப்பொலியும், நகைப்பும் எங்கள் கூடவே நடந்தன.

ஏதோ ஒரு பழகிய குரல் காதுக்கு எட்டியது. யாருடைய குரல் எட்று தேடுகையில், ஆகா... வதனா, என் தங்கை வதனா. அவள் தோழிகளுடன் சிரித்து பேசி நடந்து கொண்டிருந்தாள். பல வருடங்களுக்கு பிறகு அவளை பார்த்ததில் எனக்கு பேரின்பமாய் இருந்தது.

“டேய் வதனா...!” வாடா போடா என்றே வீட்டில் பேசுவது வழக்கம். சுற்றும் முற்றும் பார்த்து அவள் என்னை அடையாளங்கண்டு கொண்டாள்.

“டேய் இளா, எப்படி டா இருக்கே?”

“என்னை விடு. நீ எப்படி இருக்கே? அம்மாவும், அப்பாவும் வந்திருக்காங்களா?” வதனாவின் முகம் சற்றே வாடியது. சுதாகரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

”அவங்க ரெண்டு பேரும் முன்னாலே போறாங்க, நான் என் தோழிகளோட நடந்துக்கிட்டு இருந்தேன்.”

”எனக்கு அவங்களை பார்க்கனும் போல இருக்கு டா. நான் போய் அவங்கள பார்த்து பேசிட்டு வரேன்.” என்று திரும்புகையில் என் கையை பிடித்தாள் வதனா. “வேண்டாம் டா இளா, அம்மாவும் அப்பாவும் உன் மேல இன்னும் கோபமாவேதான் இருக்காங்க., தயவு செய்து போய் பார்க்காதேடா.”

என் கண்ணில் எகுரி குதிக்க நின்ற கண்ணீரை அடக்கி கொண்டேன். மீண்டும் வதனாவே பேச ஆரம்பித்தாள்.

”இத்தனை வருசமாயும் அவங்களால நடந்தத ஏத்துக்க முடியலடா இளா. நான் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னாலும் அதை ஏத்துகிற நிலமையை அவங்க இன்னும் அடையலடா. அவங்கள பொறுத்த வரையில் நீ செத்துட்ட இளா.” என் கன்னம் நனைவதை என்னால் உணர முடிந்தது.

“விடு இளா, நடந்தது நடந்து போச்சு. நீ உன் ஆரோக்கியத்தை பார்த்துக்கோடா. எதுவா இருந்தாலும் எனக்கு தெரிவி. என் செல் நம்பர் எடுத்துக்கோடா. நான் கிளம்புறேண்டா. கண்டிப்பா தொடர்பு கொள்ளு. பார்த்துக்கோடா.”

பதில் கூற இயலாமல் அவள் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு, தலையசைத்து வழியனுப்பினேன். என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றேன். சத்தமிட்டு கதறி அழ மனம் ஏங்கியது. எட்டு வருடங்களுக்கு முன்னாள் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் விழித்திரையில் உருண்டோடியது. என் நிலையை, என் எண்ணத்தை நான் வீட்டில் கூறியதும் என் தாயார் கதறி அழுத்தும், என் தந்தை என்னை வஞ்சியதும், நான் என் முடிவில் திண்ணமாயிருந்ததும் என் நினைவில் இருந்து இன்னும் அகலவில்லை. அன்றைய நாள் என் முடிவிலிருந்து சற்று தளர்ந்து இருக்கலாமோ என்று சில நேரங்களில் தோன்றுவதுண்டு. ஆனால், என் தோழிகளின் அரவனைப்பில் அணைத்தையும் மறப்பேன்.

வதனா கடந்து செல்லும் வரை காத்திருந்த நர்மதா என்னை வந்து பற்றி கொண்டாள்.

“கவலைபடாதடி, இதெல்லாம் எதிர்பார்த்தது தானே. நம்ம வாழ்க்கை இப்படிதான்-னு அவன் முடிவு பன்னிட்டான். அத மாத்த நீ யாரு, இல்ல நான் தான் யாரு? போன வாரம் என்ன பெத்தவங்கள் வந்து செஞ்ச கூத்த மறந்துட்டியா? சரி வா, மத்தவங்க எல்லாம் முன்னாடி போயிட்டாங்க. நாமும் போவோம்..”

நர்மதா கூறுவதும் உண்மையே. என்னை மட்டுமா. என் தொழிகளில் பலரும் குடும்பத்தால் தள்ளி வைக்கப்பட்டவர்களே. நாங்களூம் என்ன செய்ய? எங்கள் இயற்க்கை அது. எங்கள் வாழும் உரிமையை கையில் எடுத்தது தவறா? வீடு, சமுதாயம் என்று அனைவரும் புறக்கனித்ததனால் தானே நாங்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டோம்.

மகன் ’திருநங்கை’-ஆக மாற முடிவெடுத்ததும், பெற்றோர்கள் சற்று அமைதியாக கையாண்டாலே போதும். எங்கள் வாழ்வு செழிக்கும். சமுதாயம் எங்களை மனுசியாய் பார்த்தாலே போதும், எங்கள் உத்தியோகம் மாறும். மூன்றாம் பாலாய் எற்க வேண்டாம், வெறுத்து ஒதுக்காமல் அரவணைத்தாலே போதும்.

முற்றும்

Wednesday, June 9, 2010

இளவஞ்சி (சிறுகதை பாகம் 1)



அன்றிரவு வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டமிருக்கும் என்ற எதிர்பார்ப்பு. பக்கத்து தெருவில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா. சுற்று வட்டாரத்திலிருந்து பலரும் வந்திருந்தனர்.

முந்தைய நாள் செய்த வேலையின் களைப்பின் காரணமாக என்னால் காலையில் கோவிலுக்கு செல்ல இயலவில்லை. சற்று அயர்ந்து உறங்கிவிட்டேன். ஆனால், இன்றிரவு இரத ஊர்வலத்திற்கு நிச்சயம் வருகிறேன் என்று தோழிகளிடம் சொல்லியிருந்தேன். கடிகார முள் நான்கை மட்டுமே எட்டி பார்த்திருக்கும் வேளையில் குளியல் சத்தமும், என் தோழிகளின் பேச்சு சத்தமும், நிமிடங்களுக்கு ஒரு முறை சிரிப்பொலியும் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடியே இளவஞ்சி, ணியாச்சுடி. எழுந்து கிளம்பு. ரத ஊர்வலம் வரதா வாக்கு கொடுத்தலே?”

நர்மதாவின் குரல். ஐந்து அறைகளுக்கு கேட்கும் அளவிற்கு குரல் கொடுத்தாள். சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டி திரும்பி படுத்தேன். நிதானம் இழந்தவளாய், உள்ளே வந்த நர்மதா என்னை கைபிடித்து இழுத்து உட்கார வைத்தாள். என் நெருங்கிய தோழி அவள். என்னை நன்கு அறிந்தவளும் அவளே.

எழந்து அமர்ந்த நான் என் ஆடைகளை சரிப்படுத்திகொண்டேன். போர்வையை மடிக்க ஆரம்பித்தேன். எதையோ சாதித்த ஆணந்தத்தில் நர்மதா தன் நெஞ்சு வரை கட்டி இருந்த துண்டை இருக்கி கட்டிகொண்டு எழுந்து நடந்தாள். நானும் என் குளியலுக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஆரம்பித்தேன்.

சென்ற வாரம் நான் வாங்கி வைத்த புதிய பட்டுபுடவையை தூக்கி கட்டில் மேல் போட்டு விட்டு குளிக்க சென்றேன். கடைத்தெருவின் மேல் மாடி அது. என்னோடு சக தோழியர் பதினான்கு பேர் தங்கும் அளவிற்கு பல அறைகளை பலகையால் பிரித்து வைத்து கட்டி இருந்தான், அந்த இடத்தின் சீன முதலாளி. அனைவரும் பயன்படுத்த ஒரேயொரு குளியலறை, ஒரு கழிவறை.

யாரடி உள்ளே?”

பவானி குளிக்கிறாடிஎன்றாள், அபிதா.

அய்யோ, அவ உள்ளே போனா அரை மணி நேரம் ஆகுமே

கவலையை விடுடி. அவ உள்ளே போய் இருவத்தி அஞ்சு நிமிசம் ஆகுது.”

அபிதாவின் பதிலில் எல்லோரும் சிரித்தனர். பவானி, அபிதாவிற்கு பிறகு நான் குளித்து வெளியேற ஏறக்குறைய அரைமணி நேரம் ஆனது. அறையெல்லாம் வளையலும், கொலுசுகளும் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தன. மனதிற்குள் மௌனமாய் சிரித்துக் கொண்டு என் அறையினுள் நுழைந்தேன். கட்டில் மேல் நான் போட்ட சேலை என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தது.

தஙக கூனிட்ட, ஜன்னலிட்ட ரவிக்கையை எடுத்து அணிந்து கொண்டேன். மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தையல்காரர், ரவிக்கை தைப்பதில் கைத்தேர்ந்தவர். நான் அவருக்கு மாதத்திற்கு மூன்று ரவிக்கையாவது தைக்கும் அளவிற்கு வியாபாரம் கொடுப்பேன். அவரும் நான் கேட்ட நேரத்தில் ரவிக்கை தைத்து கொடுப்பதால் சற்று அதிகமாகவே பணம் கொடுப்பேன். ஆகவே, சந்தையில் வரும் புதியடிசைன்’-களை எனக்கு அறிமுகப்படுத்திடுவார். அதில் ஒன்றுதான் இந்த ரவிக்கை.

ரவிக்கை, பாவடையோடு கூடத்திலுள்ள கண்ணாடி மேசைக்கு வந்து அமர்ந்தேன் அலங்காரம் முடித்துகொண்டு சேலை கட்டுவதே எனக்கு சௌகரியம். என் முடியை இழுத்து ஜடை பின்ன ஆரம்பித்தேன். ஜடையில் ஒரு ரோஜா மலரை சொருகி ஐந்து முழ மல்லிகை சரத்தை சூடுவது எனக்கு விருப்பம். எனக்கு அது பொருத்தமாக உள்ளது என்று தோழிகளும் கூறுவர். ஜடை பின்னிய பின் முக ஒப்பனையை ஆரம்பித்தேன்.

அடியே, என்னடி இது? ரவிக்கையில் ஜன்னல் போட சொன்னா உன் தையல் மாமா கதவே போட்டிருக்கிறாரு?”

இல்லடி, இது மார்க்கெட்-ல புதுசா வந்த டிசைன்-, அதான் அதையே வச்சு தெக்க சொல்லிட்டேன்

அடியே இளவஞ்சி, அவருக்கு உன் மேலே ஒரு கண்ணுடி. அதான் நீ போகும் போது மட்டும் புது புது டிசைன்-ஆ காட்டுராரு. நாங்க போனா, அதே வெத்தலை டிசைன் போட்டுரவாமா-னு கேட்குராரு

அடி போடி, அவரு வயசானவருடி. நான் அவருக்கு நிறைய ஆர்டர் கொடுக்குரதாலே எனக்கு புது டிசைன்களை காட்டுராரு. அவர போய் எப்படி-டி?”

தோடா, தையல் மாமாவுக்கு வக்காலத்து, போன வாரம் ஒரு வயசானவரை பத்தி அபிதா சொன்னாலே, ஞாபகம் இருக்கா?”

ஏய், கோயிலுக்கு போறப்ப உனக்கு என்ன கதை? போய் கிளம்பு போ. மணியாகுது.”

சரிடி போறேன்.”

சுஜாதாவுக்கு என்னை அந்த தையல்கார்ரோடு சேர்த்து வைத்து பேசாவிட்டால் தூக்கம் வராது. இதுவரை, அந்த தையல்காரர் என்னிடம் கண்ணியமாகவே நடந்துள்ளார்.

மீண்டும் என் அலங்காரத்தில் முழ்கினேன். கண்ணுக்கு மையிட்டேன். கண்ணத்திலும் கண்ணிமையிலும் வண்ணப்பூச்சு தடவி, உதட்டு சாயம் இட்டுக் கொண்டேன். நர்மதாவின் அறிவுரைக்கேற்ப உதட்டின் கீழ் சிரியதாய் ஒரு கருப்பு பொட்டு இட்டேன். நெற்றியில் பாம்பு வடிவில் ஒரு சிகப்பு பொட்டு வைத்தேன். அது பிரத்தியேகமாய் என் புடவைக்காகவே தேடி வாங்கியது. கண்ணாடியில் என்னை நானே சற்று ரசித்து விட்டு அறையினுல் செல்லும் போது, நிர்மலா புடவை முந்தானையை கையில் பிடித்து கொண்டு என்னை பார்த்து சிரித்து படியே வந்தாள்.

இளவஞ்சி, இளவஞ்சி நீதான் அழகா முந்தாணையை மடிப்பியே, அதே மாதிரி எனக்கு மடிச்சி கொடேன்.”

அதானே பார்த்தேன், ஆளே காணோமே-னு. என்னடி நீ, அஞ்சு வருசமா புடவை கட்டுரே, இன்னமும் முந்தானையை அழகா மடிக்க தெரியலை”

”எல்லாம் உன் கைப்பக்குவம் மாதிரி வருமாடி, ஆ... வலிக்குதுடி, பாத்து ஊக்கை குத்துடி”

“இதை மட்டும் ஒவ்வொரு தடவையும் சொல்லிடு.”

நிர்மலா கட்டி இருந்த சந்த்தன நிறப் புடவை அவளுக்கு மிகவும் பொறுத்தமாக இருந்த்து. அவளுக்காக ‘அவர்’ வாங்கியதாம். எல்லோரிடமும் பெருமையடித்துகொண்டாள். எதுவும் நிரந்தரம் இல்லை என்று தெரிந்தாலும் அப்படி சொல்வதில் அவளுக்கு ஓர் ஆண்ந்தம்.

என் புடவையும் சும்மா சொல்வதற்கில்லை. ‘மௌனராகம்’ படத்தில் ரேவதி கட்டிய சேலை ’டிசைன்’-ஆம், அதனால் தான் உடனே வாங்கினேன். இரத்த சிகப்பாய், பெரிய பட்டு ஜரிகையோடு இருக்கும். ஆங்காங்கு பட்டு நூலால் சின்ன சின்ன ‘டிசைன்’கள் இருக்கும். சேலை முடிச்சை இடுப்பில் சொருகினேன். கொசுவ மடிப்பை ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து மடித்தேன். என் செப்பலை அணிந்துக் கொண்டு தரை தொடும் அளவிற்கு வைத்து கொசுவத்தை சொருகினேன். முன்னும் பின்னும் நடந்து கொசுவ மடிப்பை சரிபார்த்து, அழகு பார்த்து என் முந்தானைக்கு சென்றேன். உள்ளங்கை அளவிற்கு முந்தானையை மடித்து என் ரவிக்கையோடு குத்தி கொண்டேன்.

அலமாரியில் என் துணிக்கடியில் வைத்திருந்த நகை பெட்டியை வெளியே எடுத்து சிகப்பு, பச்சை கல்லிட்ட ஜிமிக்கி தோடை எடுத்து மாட்டினேன். தங்க அட்டிகை எடுது கழுத்தோடு பூட்டினேன். காசு மாலையா, மாங்காய் மாலையா என்ற குழப்பத்திற்கு பிறகு காசு மாலையை தேர்ந்தெடுத்தேன். எனக்கு மட்டும் அல்ல. என்னுடன் தங்கி இருக்கும் மற்ற பதினான்கு பேரையும் மகளாய் ஏற்ற அம்மா, ஆளுக்கொரு காசு மாலையும், மாங்காய் மாலையையும் வாங்கித் தந்திருந்தாள். இறுதியாய், நன்றாக ஒலிய்ழுப்பும் கொலுசு ஒன்றெடுத்து என் காலில் கட்டினேன். நடக்கும் போது, ஜல் ஜல் என்ற கொலுசு சத்தமும், நான் அணிந்திருக்கும் கண்ணாடி வளையலின் மோதலும் எனக்கு ஒரு வித மகிழ்ச்சியையும் நானத்தையும் தந்தது.


தொடரும்...

Tuesday, June 8, 2010

விதியின் திருவிளையாடல்

வாழனும்...
நூறாண்டு வாழனும்...
அவா நெஞ்செல்லாம் சூழ்ந்திருக்க...
கனா எண்ணமெல்லாம் நிறைந்திருக்க...

விதியின் கர விரலோ ஒரு சைபரை தன்பால் அள்ளி,
தன் கழுத்தில் மலர் மாலையாகவும்,
என் மெய் முன்னே மலர் வளையமாகவும்...

விதி தன் திருவிளையாடலை காட்டி,
வைத்தது முத்தாய்ப்பு என் நூற்றாண்டு வாழ்வுக்கு...

மரணத்தை நோக்கி

“சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிருங்க”
டாக்டரின் கைவிரிப்பு செவியில் ஒலித்தது...

டாக்டரிடம் தந்தை கெஞ்ச...
சன்னிதானங்களின் பெயரை தாய் அடுக்கிகொண்டிருக்க...
அறுந்துபோகபோகும் தாலியை மனைவி இறுக பிடித்துக்கொண்டிருக்க...
ஒன்றும் புரியாமல் குழந்தை அழ...

நான்,
நீண்ட நேர தூக்கத்தை எதிர்ப்பார்த்து...
உடல் களைப்புடன் பேச வலு இல்லாமல்...
கண்ணீருக்கு கண்ணீரால் பதில் அளித்துக் கொண்டு...
காலனின் வருகையை எதிர்ப்பார்த்துகொண்டு,
நான்...

உலகிற்கு வரவேற்று பால் கொடுத்தவள்,
இப்போது வழியனுப்ப பால் கொடுக்கிறாள்,
அனைவரும் எனை சூழ்ந்து நின்று அழுது கொண்டிருக்க,
முன்னோர்கள் புன்னகையுடன் என் வரவிற்கு காத்திருக்க...

மரணப் படுக்கையில் நான்,
மரணத்தை நோக்கி...